பக்கங்கள்

சனி, 30 ஜனவரி, 2010

எனது மலேசியா சுற்றுலா


ஈப்போவில் உள்ள சீனக்குகை கோவில்


 
அதன் அருகிலேயே அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயம்
இதுவும் ஒரு குகை கோவில் 

நம்ம ஆலமரத்தடி தலைவர்
 
இயற்கையான தூண்கள்
கோவிலின் உள்ளே செல்வதற்காண வழி

                                                    வினாயகர் ஆலயம்


                                            குகையின் மேற்பகுதி
 
மூலவர் 


மற்றொரு சீனக்குகைகோவில்


              இயற்கை நீர் ஊற்று
 
 
just தோழி
                                                கெமரான்  தேயிலை தோட்டம்

   
                                          2012 படத்தின் நினைவு
                                         இயற்கைக்கும் நமக்கும் உள்ள வேலி
                                                     ஸ்டாபெரி தோட்டம்

    
                                                               சாரதி
 பத்து மலை முருகனுக்கு அரோகரா

  
                                                    பத்து மலை மூலவர்
   
 மீண்டும் சந்திப்போம்
நன்றி வணக்கம்
 மறக்காம ஓட்டு போடுங்க


வியாழன், 28 ஜனவரி, 2010

சித்திரை 2

தொடர்ச்சி…
முதலில் சூரிய மாதம் பற்றி ஒரு மேற்கோள்.
மணிமேகலையில், புத்தர் பிறந்த தினத்தைக் குறிக்கும் இரு இடங்களிலும் சூரியன் செல்லும் மாதத்தை இடபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து
ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்றபின்
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின்
போதித் தலைவனோடு பொருந்தி..” (11 & 15 )

buddha-purnima-moon-thanks-arvind-narvekar‘இளவேனில் பருவத்தில் இடபத்தில் சூரியன் 13 நாட்கள் சென்றபின் மீனத்து இடை நிலையில் திங்களோடு பொருந்தும் போது’ என்று பொருள் தரும் இவ்வரிகளை சோதிடம்மூலம் தான் புரிந்து கொள்ள முடியும். இளவேனில் என்பது சித்திரை; வைகாசி என்பது, இங்கே வைகாசி என்று சொல்லாமல், இடபம் என்று சாத்தனார் கூறியுள்ளது, அந்நாள் வழக்கப்படியே. இடபம் என்று சொன்ன மாத்திரத்திலேயே, அது சூரியன் இருக்கும் மாதத்தைக் குறிக்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘இளவேனில் பருவத்தில், சூரியன் இடபத்தில் 13 நாட்கள் சென்ற பின்..’ என்று இப்பகுதி கூறுகிறது. சூரியன் ஒரு நாளுக்கு ஒரு பாகையைக் கடக்கிறான். 13 பாகைகள் கடந்திருந்தால், அன்றைக்கு அந்த மாதம் (அ) ராசிக்கு வந்து 13 நாட்கள் முடிந்து விட்டன என்று அர்த்தம். போதித் தலைவனான புத்த பிரான் வைகாசி விசாகத்தில், அதாவது வைகாசி மாதம் பௌர்ணமியில் பிறந்தார். அவர் பிறந்த அந்த நாளில், சந்திரன் இருக்குமிடம் எளிதாகத் தெரிந்து கொண்டு விடலாம் - விசாகம் என்று. ஆனால் சூரிய மாதத்தில், அன்று எத்தனையாவது நாள் என்று சொல்லும் வகையில் இந்த வரிகள் அமைத்துள்ளன. இடபத்தில் 13 நாட்கள் சென்றபின் என்றால், சூரிய மாதத்தில் 14 -ஆம் நாள் என்று பொருள். இதையே வைகாசி மாதத்தில் 14-ஆம் நாள் என்று சாத்தனார் சொல்லியிருந்தால் குழப்பமாகியிருக்கும். வைகாசி என்பது சந்திர மாதம், அதில் 14-ஆம் நாள் என்றால், அன்று சதுர்த்தசி - பௌர்ணமிக்கு முதல் நாள் என்று அர்த்தம்.
இந்த வரிகள் மூலம், புத்தர் பிறந்த சந்திர மாதம் என்று ஆரம்பித்தது என்று கூறி விடலாம். சூரியன் இடபம் வந்து 13 நாட்கள் ஆகி விட்டன. ஆனால் அன்றோ, பௌர்ணமி, சந்திர மாதத்தில் 15-ஆம் நாள்.எனவே சூரியன் மேடத்தில் 28 -ஆம் பாகையில் இருந்த போது, அமாவாசை வந்திருக்க வேண்டும். மேட மாதத்தின் 29 -ஆம் நாள் வைகாசி (சந்திர மாதக் கணக்கில்) ஆரம்பித்திருக்கும். அப்பொழுதுதான், இடபத்தின், 14-ஆம் நாள் விசாகப் பௌர்ணமி வந்திருக்கும்.
இந்தச் செய்யுளில் இடைநிலை மீன் என்று சொல்லப்படுவது ஒரு முக்கிய வானியல் குறிப்பு ஆகும். விசாக நட்சத்திரம், இடைநிலை மீன் ஆகும். விஷாகா என்றாலே பிரிக்கப்பட்டது அல்லது பிளவு பட்டது என்று பொருள். சோதிடத்தில் இதற்கு ஒரு விளக்கம் உண்டு. கிருஷ்ணாவதாரம் நடந்த போது, equinox என்று சொல்லப்படும் சம நோக்கு நாள் கார்த்திகையிலும் விசாகத்திலும் அமைந்தன. அதற்குமுன் வரை விசாகம் ராதா என்று அழைக்கப்பட்டது. ராதாவை அடுத்து வந்த அனுஷம், எனவே அது அநு-ராதா என்று அழைக்கப்பட்டது. சம நோக்கு நாள், ராதாவை வடக்கு, தெற்கு என்று பிளந்ததால், அது முதல் விசாகம் என்று அழைக்கப்படலாயிற்று என்பது சோதிடக் கருத்து. இக்கருத்து, இடைநிலை மீனம் என்று விசாகத்தைக் குறித்து வரவே, பண்டைத் தமிழர் கொண்டிருந்த வானியல் அறிவு தெரிகிறது. அவர்கள் கடைபிடித்த வருடப் பிறப்பும் அப்பழுக்கில்லாத சரியான நிலைப்பாடாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நிரூபணமாகிறது.
இப்பொழுது சந்திர மாதத்தைக் காட்டும் உதாரணத்தைப் பார்ப்போம். புறம், 229 - ஆம் பாடல் முழுவதுமே அரிய சோதிடக் கருத்துகளைக் கொண்டுள்ளது. “ஆடிய லழர் குட்டத்து” எனத் தொடங்கும் இப்பாடல் பாடப்பட்டது பங்குனி மாதத்தில். பங்குனி பிறந்து அன்றைய தினம் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறான். அன்று நள்ளிரவில், பங்குனிக்கு உச்சமாகிய உத்தர நட்சத்திரம், தலை மேல் இருக்கிறது. அங்கிருந்து உத்தரம் சாய ஆரம்பித்தவுடன், ஒரு எரி நட்சத்திரம் வடக்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வீழ்த்தது. அதைக் கண்ட புலவர் கூடலூர்க் கிழாரும் மற்ற பலரும் நம் அரசனுக்கு என்ன ஆகுமோ என்று அஞ்சினர். அவன் நோய்வாய்ப்படாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டினர். எனினும் அந்த எரி நட்சத்திரம் கண்ட ஏழாம் தினம், அரசன் மறைந்த துக்கச் செய்தி வந்தது என்று போகிறது அப்பாடல்.
டாக்டர் உ.வே.சா. அவர்கள் கண்டெடுத்த உரையில் (யார், எப்பொழுது எழுதினர் என்று தெரியாத பழமை கொண்ட உரை - டாக்டர் . உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த, ‘புறநானூறு மூலமும், உரையும்’ புத்தகத்தில் காணலாம்) “பங்குனி மாதத்தினது முதல் பதினைந்தின் கண் உச்சமாகிய உத்தரம், அவுச்சியினின்றும் சாய” என்று வருகிறது. பங்குனி மாதத்தின் 15 .ஆம் நாள் உச்சமாவது பங்குனி உத்தரம் என்னும் பௌர்ணமி சந்திரன். எனவே இங்கு சொல்லப்படுவது அமாவாசை அடுத்து வரும் பிரதமை முதல் ஆரம்பிக்கும் சந்திர மாதமே.
அதேபோல், இந்திர விழா ஊரெடுத்தக் காதையில், “சித்திரை, சித்திரைத் திங்கள் சேர்ந்தென” என்று கூறுவதும், சந்திர மாதச் சித்திரையில், சித்திரா பௌர்ணமி என்று பொருள் படும். அவ்வாறே அக நானூறு 137 -இல் பங்குனி உத்தரத்தில், திருவரங்கத்தில் நடக்கும் விழா சந்திர மாதம் குறித்து வருவதே. (பங்குனி உத்தர உத்சவம் அரங்கன் கோயிலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது என்று தெரிகிறது.)
சமீபத்திய சில நூறு வருடங்களில் தான் சந்திர மாதப் பெயர்கள், சூரிய மாதங்களுக்கு வந்திருக்க வேண்டும். அது எப்படி என்று ஆராயப் புகுந்தால், பிரபவ முதலான 60 வருடக் கணக்குகள் இந்த மாற்றத்தின் அவசியத்தை உணர்த்தியிருக்கும்.

பிரபவ முதலான 60 வருடங்கள்
சித்திரை வருடப் பிறப்பு எதிர்ப்பாளர்களுக்கு அலர்ஜியான ஒன்று, இந்த 60 வருடக் கணக்கு. இது எப்பொழுது உருவானது அல்லது எழுதப்பட்டது என்று தெரியாது. ஆனால் எல்லாப் பழைய சோதிட நூல்களும் கூறுவது. நாரத சம்ஹிதையிலும் காணப்படுகிறது (அபிதான சிந்தாமணி கூறுவது போல அல்ல). ப்ருஹத் சம்ஹிதையிலும் காணப்படுகிறது. சூரிய சித்தாந்தத்திலும் சொல்லப்படுகிறது. இந்த 60 வருடங்கள், வியாழன் கிரகத்தின் 60 வருட சுழற்சியின் பெயர்கள். இவற்றை சூரிய வருடங்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் இன்று வழக்கில் சூரிய வருடங்களுக்குச் சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்தைச் செய்தவர்கள் தமிழர்கள்தான் என்பது எனது கருத்து. இடைக் காட்டுச் சித்தர் அளித்துள்ள 60 வருடப் பலன்களும், பிரபவ முதலான 60 வருடங்களைத் தாங்கியுள்ள சூரிய வருடங்களுக்கே. இது எவ்வாறு நடைமுறைக்கு வந்திருக்க முடியும்?
இதற்கு பதிலை தொல்காப்பியர் சிந்தனையிலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பு என மொழிப இயல்பு உணர்ந்தோரே”

என்கிறார். இதில் பொழுது என்பது, அந்நிலத்தின் தட்ப வெப்பம் சார்ந்தது. இவ்விரண்டின் இயல்பு தெரிந்தோரால்தான் இவற்றைப் பற்றிப் பேச முடியும், இவை குறித்த விதிகளை வகுக்க முடியும். தமிழ் நிலம், அதன் தட்ப வெப்பம் என்பது, பழந்தமிழ் நாட்டில் இருந்தது போல இன்றில்லை. சூரியன் சிம்ம ராசி ஏகினவுடன், பொதியில் முனிவனான அகத்தியன் (Canopus) சூரிய உதயத்திற்குமுன் எழும்போது (Heliacal rising), சைய மலையில் மழை பொழியும், என்கிறது பரிபாடல்- 11. இது மேற்குத் தொடர் மலை. இன்று அம்மலை நம் வசம் இல்லை. அங்கு மழை பெய்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் இல்லை. மூவேந்தர் ஆட்சி அஸ்தமித்த உடனேயே தமிழ் நிலமும் மாறிவிட்டது, மக்கள் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு இடைக் காட்டு சித்தர் போன்றவர்கள், சூரிய மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, 60 வருடப் பெயர்களையும் சூரிய வருடங்களுக்குக் கொடுத்திருப்பர்.
இந்த வருடங்கள் அலங்காரப் பெயர்கள் அல்ல. அந்தந்த வருடத்தில் நடக்கும், சம்பவங்கள், வானிலை, மழை, உழவு குறித்த விஷயங்களைக் கூறுவன. தமிழ் நாட்டில் நாம் இன்று பின்பற்றி வரும் வருடக் கணக்கு, வட மாநிலங்களிலிருந்து வேறுபட்டது. அதாவது, இங்கே நமக்கு விரோதி வருடம் என்றால், வட இந்தியாவில், சார்வரி வருடம். இந்த மாறுபாட்டை, இடைக் காட்டுச் சித்தர் போன்றவர்களோ, அல்லது சோதிட வல்லுநர்களோதான் - தொல்காப்பியர் கூறினது போல, நிலம், தட்பவெப்பம் ஆகியவற்றின் இயல்பு உணர்ந்தவர்கள்தான் கொண்டு வந்திருக்க வேண்டும்.
60 வருடங்களும், நிலம், தட்பவெப்பம் குறித்து, சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன. இவற்றைக் குறித்தும் வைத்துள்ளனர். அதன் அடிப்படையில், வருடப் பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று நாம் பின்பற்றும் வருடக் கணக்கு, நம் பகுதியில் உள்ள வெப்பம், பருவ மழை இவற்றைப் பொருத்ததே.
வருடப் பலன்களை அறிந்து கொள்ள, அவற்றின் பெயர்களே போதும். அப்படி என்றால், இப்பெயர்களைத் தமிழ்ப் படுத்தி இருக்கலாமே என்று கேட்கத் தோன்றும். அது எளிதல்ல. பல பெயர்களுக்கும் சரியான மொழிபெயர்ப்பு தமிழில் மட்டுல்ல, பிற மொழிகளிலும் கிடையாது. தமிழ்விரும்பிகள் கோபப்படாமல் இதைப் படிக்க வேண்டும்.
தானம், தவம் இரண்டும் தங்கா வியனுலகம் பற்றிப் பேசின வள்ளுவரே அந்த இரு வட சொற்களை அப்படியே கையாண்டுள்ளார். ஏன்? அவை சொல்லும் கருத்தை அவற்றைப் போல ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சொற்களைத் தமிழில் அப்படியே ஏற்றுள்ளனர்.
உதாரணமாக, 2006 -2007 -இல் வந்த வியய வருடத்தை எடுத்துக் கொள்வோம். இதைச் சரியாக மொழிபெயர்க்க முடியாது. ஓரளவு சொல்ல வேண்டும் என்றால், குறைவு, நஷ்டம், செலவு என்று சொல்லலாம். அந்த வருடப் பலன் மேற்சொன்னவாறு இருக்கும். வியய என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த வருடம் நடந்ததை நினைவுகூற வேண்டும். அந்த வருடம்தான், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இலவசமாகத் தர ஆரம்பிக்கப் பட்டன. அது நடந்த ‘வியய’ எப்படிப்பட்டது என்றால், ஆக்க பூர்வமான செலவுகளுக்கான அரசுப் பணம் (மக்கள் பணம்) குறைவுதரும் வண்ணம் செலவழிக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த குறைவு (வியய), புது வழிகளில் இன்று மக்களாட்சித் தத்துவத்தின் ஆணி வேறான வாக்குச் சீட்டின் புனிதத்தையே புதைக்கும் அளவுக்கு இழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டது.
இவ்வாறு சரியான வார்த்தைகள், பல வருடப் பெயர்களுக்கு இல்லாமையாலும், புரிந்த வார்த்தைகள், மக்களை பயமுறுத்தும் வண்ணம் இருப்பதாலும் - (விரோதி என்னும் இவ்வருடம், எதிரி என்று தெளிவாகப் பொருள் தருவது) - சித்தர் போன்றவர்கள், வழக்கு ஒழிக்காமல் அந்த 60 வருடப் பெயர்களையே சூரிய வருடங்களுக்குச் சூட்டி இருப்பார்கள். பாதி புரிந்தும் புரியாததுமாக வட மொழியிலேயே அப்பெயர்கள் இருப்பது, அல்லலுறும் மக்கள், பலன் தெரிந்துகொண்டு மேலும் புதுக் கவலைகள் கொள்ளாமல் இருப்பதற்கு உதவும்.

ஆவணியில் புது வருடமா?
அந்நாள் தமிழர்கள் ஆவணி மாதத்தில் புது வருடத்தைத் துவங்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உலவுகிறது. இதற்கு அடிப்படை, “மாயோன் மேய காடுறை உலகமும்” என்றும், “காரும் மாலையும் முல்லை” என்றும் ஆவணி மாதத்தில் துவங்கும் கார்ப் பருவத்தையே தொல்காப்பியர் முதலில் கூறியுள்ளார் என்பதே. இயல்பு தெரிந்து இயல்பு உரைக்க வேண்டும் என்று அவர் கூறுவதற்கொப்ப ஆராய்வோம். மக்களின் வாழ்வாதாரமான் மழை வரும் நேரம், மழையின் அளவு, அது தொடரும் காலம் ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எவைஎவை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அவர் கூறியுள்ள பொழுதைப் பார்த்தாலே புரியும்.
  • குறிஞ்சியில், நடு ராத்திரி குளிரைச் சமாளிக்க வேண்டும். வெதுவெதுப்பாக அந்நேரம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்.
  • முல்லையில் முக்கிய நேரம், மாடுகள் திரும்பும் மாலை நேரம். அப்பொழுதுதான் முல்லை மக்கள் மிகக் கவனமாக தங்கள் ஆநிரைகளை திரும்பி கொட்டகையில் சேர்ப்பிக்கும் நேரம்.
  • மருதத்தில், விடியலுக்கு முன்னமே உழவு வேலைகளைத் தொடங்கிவிட வேண்டும், வெயில் ஏறி விட்டால் நிலத்தில் வேலை செய்ய முடியாது.
  • நெய்தலில், சந்திரன் உதிக்கும் எற்பாடு நேரம் கடலுக்குச் செல்லும் நேரம்.
இப்படி அந்த அந்த நிலங்களின் தன்மைக்கு ஏற்ப, தொழில் குறித்தும், அவரவர் முக்கிய பொழுது அமைகிறது. ஒட்டுமொத்த தமிழ் நிலங்களை நோக்கினால், பருவ நிலை என்பது, மாரிக் காலம் துவங்கி முக்கியத்துவம் பெறுகிறது. மாரிக் காலம் நன்றாக இருந்தால்தான், வரும் வருடம் வளமாக இருக்கும்.
பரிபாடல் 11-இல் கார் காலத்தில் வரும் முதல் மழை, சரியான சமயத்தில்தான் வந்துள்ளதா என்று சொல்லிவிட்டுத்தான், புலவர், அந்த மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கும் பாவை நோன்பு பற்றி விவரிக்கின்றார். பாவை நோன்பு, நல்ல கணவனைப் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, கொண்ட கணவன் தன்னை விட்டுப் பிரியாமல் இருக்கவும், அவனே வரும் பிறவிகளிலும், கணவனாகக் கிடைக்க வேண்டும் என்றும் மகளிர் அனைவரும் செய்வது. இதைச் செய்யும் மார்கழி மாதம், மழையைக் கருத்தரிக்கும் மாதம். இது ஆண்டாண்டு காலமாக முனிவர்களால் சொல்லப்பட்டு, சோதிடர்களால் கணிக்கப்பட்டு மழை வரவை உறுதி செய்யும் நோன்பும்கூட.
மார்கழி விடியலுக்குமுன், காற்று மண்டலத்தில் மக்கள் வெளியில் செல்வதால் உண்டாகும் சலசலப்பும், சில்லிடும் ஆற்று நீரில் குளிப்பதால் ஆற்று நீரில் ஏற்படும் சலனங்களும், மணலில் பாவைகள் செய்து உற்சாகக் கூக்குரலிடும் சிறுமியர் எழுப்பும் சப்தமும், ஆற்றங்கரையில், ஹோமத் தீ வளர்த்து உண்டாக்கும் வெம்மையும், தெய்வம் தொழும் போது எழுப்பும் ஒலி அலைகளும், என்றைக்கெல்லாம் அவ்வாறு செய்யபட்டனவோ, அன்றிலிருந்து, 195 - ஆம் நாள் மழை பெய்வதை உறுதி செய்யும் என்பது சோதிட விதி. இது தவறுவதில்லை.
மார்கழி, திருவாதிரைப் பௌர்ணமியில் ஆரம்பிக்கும் இந்த நோன்பு தொடர்பாக, அன்றிலிருந்து, 6 மாதம் கழித்து, அதே திருவாதிரை நட்சத்திரத்தில், சூரியன் பிரவேசிக்கும் போது உள்ள கிரக நிலைகளைப் பொருத்து, அதன்பின் வரும் கார்ப் பருவத்தில், மழை எந்த அளவு இருக்கும் என்று கணிக்கப்படும். நல்மழை பொழிவதற்காக தங்கள் அக வாழ்க்கைக்குரிய நோன்புகளை, ஒரு பொது நலம் கருதியும் செய்த உயர் மக்கள் கொண்ட நாடு, நம் நாடு.
bajanகாலம் சுழன்றாலும், இந்த மார்கழி குறித்த - மழை வரச் செய்யக் கூடிய - விடியலுக்குமுன் செய்ய வேண்டிய சலசலப்புகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று நம் குடிப்பெருமை, மதப் பெருமை முதலியவற்றை நாம் அறியாது இருந்தாலும், அவற்றை மறந்தாலும், காலமானது நாம் அறியாமல் நம்மை வழிப்படுத்திக்கொண்டு செல்கிறது. பாவை நோன்பு கலாசாரம் போனாலும், பஜனை பாடும் வழக்கம் வந்து, மார்கழி வைகறையை சலசலப்புக்குள்ளாக்கியது. தற்காலத்தில், ஐயப்ப பக்தர்கள் அந்த உத்தம நன்மையைச் செய்கிறார்கள். விடியலுக்கு முன், அவர்கள் கோவிலுக்குச் செல்லுதலும், பஜனை பாடுதலும், முற்காலத்தில் பாவை நோன்பின் போது சுற்றுப்புற சூழலில் உண்டாக்கப்பட்ட சலசலப்பிற்கு ஒப்பானது. இதனால், அடுத்த கார்ப் பருவம், மழை தரும். இப்படி நம் வாழ்க்கை, நாம் உணராமலேயே, கார் பருவத்தை முன்னிட்டுதான் இயங்குகிறது.
காரின் முக்கியத்துவத்தை முன்னிட்டு, தொல்காப்பியர் அவ்வாறு எழுதியது, வருட ஆரம்பம் என்று எப்படி ஆகும்?

தையில் புது வருடமா?
சங்கத் தமிழ் நூல்களில் ‘தை‘ என்பது திருநாளாகச் சொல்லப்படவில்லை. அது ஒரு விழாவும் அல்ல. மார்கழியும், தையும் மேற் சொன்னாற்போல் பாவை நோன்பு நோற்கும் காலம். ஆவணியில் துவங்கிய மழைக் காலம், (சேர நாடும் சேர்ந்த அன்றைய தமிழகத்தில்) கார்த்திகை மாதம் வரையில் நன்கு பெய்யும். காட்டாற்று வெள்ளமாக நீர் நிலைகள் நிரம்பியும், குழம்பியும் இருக்கும். மார்கழி மாதத்தில் மழை பெய்வது நின்று, ஆற்று நீர் தெளிந்து ஆங்காங்கே குளம்போல் விளங்கும். மார்கழிக்கு எதிர்புறத்தில் உள்ள புனர்பூசம் நட்சத்திரம் குளம் எனப்படும். அதனாலும், மார்கழி மாதத்தைக் குளம் என்பர். (இந்த செய்தியை பரிபாடல் 11 -இல் காணலாம்.)
தை பிறக்கும் போது, தண்ணீர் நன்றாகவே தெளிந்து விடும். இயற்கையையும், நீர் நிலைகளையும் தெய்வமாக நினைத்த அந்நாள் மக்கள், ‘தவத்தை நீராடுதல்’ என்பதை ஒரு தவமாகவே செய்தனர்.
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர,
வையை! நினக்கு மடை வாய்த்தன்று.
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து,
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர்,
அவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ, 90
தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்?
நீ உரைத்தி, வையை நதி!

தாயும் மகளுமாக பனி நீரில் மூழ்கி எழுந்து, ஆங்கே நதிக்கரையில் ஆதிரையோனுக்குச் செய்யும் ஹோமத்தீயை வலம்வந்து, முன்பிறவியில் செய்த தவப்பயனோ இன்று நாம் இருப்பதும் இந்த வைகையில் குளிப்பதும் என்று வியந்து, கண்ணாடி போலத் தெளிவாகத் தெரியும் நீரே, எம் வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நீ தைத்துக் கொள்ளும் வண்ணம் தெளிவாக இருக்கிறாய், தை நீரே, நீ தான் எங்கள் வேண்டுதல்களை வாங்கிக்கொள்ளத் தக்கவள் என்று கூறுவர்
“நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”, என்கிறது பரிபாடல் 11.
month_raasiமார்கழி முடிந்து வரும் தை தெள்ளிய நீர் ஓடும் காலம். அன்ன நடை, அழகு நடையுடன் வரும் ஆற்றுக் கன்னி, மக்கள் எண்ணங்களை தைத்துக் கொள்கிறாள். தை-இ என்னும் சொல் சங்க நூல்களில் பல இடங்களிலும் வருகிறது. தை என்றால், தைத்தல் என்று பொருள். தைத்தல், பின்னுதல், பொருத்துதல், சேர்த்தல் என்னும் பொருளிலேயே வருகிறது. கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், மக்கள் தம் எண்ணங்களைத் தைத்துக் கொள்ளும் பளிங்கு போல இருக்கிறது. இந்த மாதத்திற்கு நேர் எதிரில் இருக்கும் மாதம், தைக்கப்பட்ட எண்ணங்களைப் பிரதிபலிக்கச் செய்தார் போல கண்ணாடி போல் இருக்கும் “ஆடி” மாதம் என்றாயிற்று.
தையில், நீரில் கண்ட பிம்பம், ஆடியில் - கண்ணாடியில் நேர் முகமாகத் தெரிய வேண்டும். தையில் உள் வாங்கிய வேண்டுதல்கள், ஆடிக்குள் நிகழ்ந்து விட வேண்டும். இதுவே தவம். நீரின் கண் நின்றும் செய்யும் தவம், மற்றும், நெருப்பின் கண் நின்று (ஹோம குண்டம் சுற்றி) செய்யும் தவம், ஆக பாவை நோன்பு முடித்து, “தவத்தை நீராடி” (பரி பாடல் 11), புலனடக்கி, காக்கும் தெய்வமான ஆற்று நீரின் கண், தங்கள் வேண்டுதல்களைக் கொட்டி செய்யப்படுவதே ‘தை- நீராடல்’ ஆகும்.
இதன் ஆரம்பம் தை மாத முதல் தினமல்ல. மார்கழி பௌர்ணமியிலேயே ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய பின்புலம் கொண்ட தை மாதம் எங்ஙனம் வருடப் பிறப்பாகும்?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லியுள்ளனரே என்பார்கள். யாருக்கு வழி பிறக்கும்? திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கு. அப்படிக் காத்திருக்கும் கன்னியர் எல்லோருக்குமே திருமணம் ஆகி விடுவதில்லை.
காத்திருக்கும் தலைவனுக்கோ பெண்ணின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. பாவை ஆடிய இளம் பெண், அவளைப் பார்த்து ஏங்கும் தலைவனைக் காணாள் இல்லை. அவளிடம் மனம் பறிகொடுத்த தலைவன் சொல்கிறான், “நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?” (கலித் தொகை 59)
“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று நக்கல் பேச்சு பேசுகிறான். இப்படியெல்லாம் அக வாழ்கையின் ரசனை ததும்ப ஓடும் கருத்துக்களைக் கொண்டதால் அந்த மாதமே வருடப் பிறப்பு என்று எப்படி சொல்லலாம்?
மேலும் தையை தொடர்ந்து வரும், மாசி மாதம் எப்படிப்பட்டது? ‘மாகூர் திங்கள்’ என்னும் பதிற்றுப் பத்து பாடல் (59), மாக்கள் குளிர் தாங்காமல் உடலைக் குறுக்கிகொள்ளும் மாசி மாதம், மாகூர் மாசியாகும் என்கிறது. அந்தப் பாடலில், பாணன் எப்பொழுதுதான் குளிர் நீங்கி, வெயில் வரும் எனக் காத்திருக்கிறான். பொதுவாக, விடியலுக்கு முன்னாலேயே பாணர்கள் அரசனைக் காணக் கிளம்பி விடுவர். அப்பொழுதான், வெயிலுக்கு முன் அரண்மனை சென்று அடைய முடியும். ஆனால் மாசி மாதத்தில் விடிகாலையில் கிளம்ப முடிவதில்லை. குளிரும் பனியும் அதிகம். மேலும் மாசித் தன்மை உடையதால் அது மாசி என்று உரை காரர் கூறுகிறார். மாசி என்றால் மேகம் என்றும் பொருள். மேகமே இறங்கி வந்தாற்போல், பனி மூட்டம் நிலத்தின் மீது பரவி இருப்பதால் அது மாசி என்றாயிற்று.
நெடு நல் வாடையிலும், (6) ” மாமேயல் மறப்ப, மந்தி கூற” என்று கூறுகிறது. மாசி மாதம், மாடுகள் குளிர் காரணமாக மேயச் செல்லாது மந்தி உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கும். “தையும் மாசியும் வையகத்து உறங்கு” என்று பதிற்றுப் பத்து உரைகாரர் கூறுகிறார். வையம் உறங்கும், தைமாதமா வருடப் பிறப்பு என்னும் முக்கியத்துவம் பெற முடியும்?
பொங்கல் திருநாளும், வருடப் பிறப்பும். பொங்கல் திருநாள் தமிழர் திருநாள். அதனால் அன்றே வருடப் பிறப்பு கொண்டாடுவது தக்கது என்று ஒரு வாதம். தமிழர் திருநாள் என்று, தமிழருக்கே உள்ள பிரத்யேகமான பண்டிகை என்று ஒன்று இருக்குமானால் அது கார்த்திகை தீபம் மட்டும்தான். அதைத் தமிழர் தவிர வேறு யாரும் கொண்டாடுவதில்லை. நான் அறிந்த அளவிலேயே, மூன்று இடங்களில் அகநானூறில் கார்த்திகை தீபத்தை எவ்வாறு பழந்தமிழர் கொண்டாடினர் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பொங்கல் பண்டிகை பற்றி சொல்லப்படவில்லை.
மக்கள் பொங்கலாடுவர் - எல்லாப் பண்டிகையிலும்.
“பூவும், புகையும், பொங்கலும் சொரிந்து” கடவுளை வணங்கி, இந்திர விழாவில் கொண்டாடினர் என்று சிலம்பு கூறுகிறது. இன்றைக்கும், எந்த விசேஷ நாளிலும் அம்மனுக்குப் பொங்கலிடுவர். தையில் மட்டும் அல்ல, மார்கழியிலேயே பொங்கல் பொங்குதல் ஆரம்பித்து விடுகிறது.
அறுவடையைக் கொண்டாடிப் பொங்கலிடுவர். புது அரிசியைப் பொங்கலிட்டுப் படைத்து விட்டுதான் உண்பர். புது அரிசி உண்பதற்கு நேரம் காலம் பார்த்துதான் சமைத்து உண்ண வேண்டும். இதற்கென்றே சோதிட விதிகள் உண்டு. பொங்கல் பண்டிகை அன்று, நாடு முழுவதுமே மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.ஆனால் பொங்கலாடுதல் என்று ஒரு சொல்லாட்சி தமிழில் உண்டு. “பெய்து புறன் தந்து பொங்கலாடி விண்டுச் சேர்ந்த வெண்மழை போல” என்று 6 -ஆம் பதிற்றுப் பத்தில், 5 -ஆம் பாடலில், காக்கைப் பாடினியார், ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பற்றிச் சொல்கிறார்.
பொங்கலாடுதல் என்றால், நன்கு பெய்து ஓய்ந்த மேகமானது, பஞ்சினைப் போல வெண்மையாக, பரவி, விரிந்து, பொங்கி, வானத்தின் மேலே போய் நிற்கும். அதைப் போல் சேரமானும், நன்கு சிறப்பாக வாழ்ந்து, விரிந்து, உயர்ந்து, பரந்து பொங்கலாடுவது போல் பல்லாண்டுகள் வாழ்கிறான்.
இக்கருத்தை அகம் 217 -இலும் காணலாம்.
pongal-celebrationsநன்கு வாழ்ந்து, மனம் நிறைந்து, மகிழ்ந்து, நல்ல பலன் தந்த மேகம் பஞ்சு போல் பரவிப் பொங்கியதைப் போல இருத்தல் பொங்கலாடுதல் ஆகும். திருப்தியான அறுவடை செய்துகிடைத்த அரிசியைக் களைந்து போட்டபின், வெண்மையாகப் பொங்கும் அந்த உணவும், அதனால் பொங்கல் என்று பெயர் பெற்றிருக்க வேண்டும். மன நிறைவு ஒரு முக்கிய காரணம் என்பதால், விழாக்களிலும், பண்டிகையிலும், அறுவடை முடிந்த பின்னும், பொங்கலிடுதல் வழக்கமாக இருந்திருக்கின்றது.
கரும்பும் அதே போல் தான். இந்நாளில் தைப் பொங்கல் பொழுதுகளில்தான் கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களைப் பார்த்தால், கரும்பு வருடம் முழுவதும் விளைந்த பயிர் என்பது புலனாகிறது. கரும்பும், பூவும் இல்லாமல் ஒரு விழாவும் கிடையாது. இது பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்து, புறநானூறு முதலியவைகளில் உள்ளன.
எனவே பொங்கல் பண்டிகை தமிழர் பண்டிகை என்று சொல்லி வருடப் பிறப்பை அன்று கொண்டாடுவது சரியல்ல.

வானியல் கருத்துக்கள்
வானியல் அடிப்படியில் தான் சொல்கிறோம், சூரியன் வடக்குப் பயணம் துவங்கும் மகர சங்கராந்தி எனப்படும் தை முதல்நாளே வருடப் பிறப்பு என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. சூரியனின் வடக்குப் பயணம், அதற்கு முன்பே தொடங்கி விடுகிறது. 72 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பாகை என்று சூரியன், precession என்று பின்னோக்கி நகர்கிறான். தற்சமயம், அந்தக் கணக்கின்படி தனுர் ராசி 6-ஆம் பாகையில் வடக்கு நோக்கித் திரும்பி விடுகிறான். அதேபோல் சமநோக்கு நாள் என்பதும் மீன ராசியில் 6-ஆம் பாகையில் ஏற்படுகிறது. நிலையில்லாத இந்தக் கணக்கைக் கொண்டால் என்றென்றும் குழப்பம்தான். ஆனால் வருடம் ஆரம்பித்தல் என்பதில் குழப்பமே கிடையாது. அது சூரியன் மேட ராசியில் நுழையும் நேரம்தான். ஏனென்றால், அதுதான் மக்கள் தொகுதியின் பிறந்த தினம்! சதுர் மகா யுகம் எனப்படும் யுகங்கள் ஆரம்பித்த முதல் நாள்.
இப்பொழுது நடக்கும் சதுர் மகா யுகம் ஆரம்பித்த அன்று, சூரியன் உட்பட அனைத்து கிரகங்களும், மேட ராசியில் 0 பாகையில் நின்றிருந்தன. அதுவே யுகாதி. சூரிய மாதக் கணக்கில், சூரியன் மேடத்தில், அசுவினியில் பிரவேசித்ததை பிறந்த நாளாகக் கொள்கிறோம். ஆந்திரா போன்ற மற்ற இடங்களில் உள்ளவர்கள், சந்திர மாதக் கணக்கைப் பின்பற்றி, சந்திரன், சூரியனோடு சேர்ந்த அமாவாசையின் அடுத்த நாளை யுகாதி என்று கணக்கிட்டு வருடப் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். சதுர் யுகத்தின் முதல் யுகமான கிருத யுகம் ஆரம்பித்தபோது, சந்திரனும் சூரியனுடன் கூடிய அமாவாசையாக இருந்திருக்க வேண்டும் - ஏனெனில், எல்லா கிரகங்களுமே. பூஜ்யம் பாகையில் இருந்தன என்பது சோதிடக் கணக்கு. அதன் பிறகு எல்லா கிரகங்களும் வேறு வேறு வேகத்தில் பயணம் ஆரம்பித்தவுடன், சந்திரனும் சூரியனும் சேரும் அமாவாசையும், மேடத்தின் பூஜ்யம் பாகையில் அமைவதும் எப்போழுதோதான். அதனால் தெலுங்கர்கள் கொண்டாடும் யுகாதி தினம் வேறுபடுகிறது. சூரியமாதம் பின்பற்றும் நாம், சூரியன் மேடத்தில் நிழைவதைத்தான் கணக்கில் கொள்கிறோம். இதுவே மிகச் சரியான கணக்கும் கூட.
சூரியக் கணக்கின் படி மேடத்தில் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படும். உலகத்தின் லக்னம் என்று பொருள். நாடு, உழவு, பருவ நிலை, மக்கள், ஆட்சியாளர் குறித்த சம்பவங்கள் இந்த ஜக லக்னத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படுகின்றன. அதனால்தான் வருடப் பிறப்பு என்பது, பஞ்சாங்கம் வாசிப்பதுடன் வருகிறது. வரும் வருடம் எப்படி இருக்கும், மழை, விளைச்சல் இருக்குமா என்பது போன்ற பெரிய அளவில், நாட்டை பாதிக்ககூடிய விஷயங்களை அறிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அரசன் (ஆட்சியாளர்) முடிவெடுக்க வருடப் பிறப்பு உதவுகிறது.
இந்த விதத்தில் பார்த்தால் வருடப் பிறப்பும் வருமுன் காப்போம் வகையைச் சேர்ந்ததுதான். அதனால் தங்களுக்கு என்ன லாபம் என்று ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறது!! தையில் என்றாலாவது ‘சங்கம’ மித்து விடலாம். சித்திரையில் என்ன இருக்கிறது? யாராவது, ஏதாவது ஐடியா கொடுங்களேன்!
முற்றும்.