பக்கங்கள்

திங்கள், 18 ஜனவரி, 2010

புதுவருட குழப்பமும் கருணாவின் சாதனையும்

வழக்கம் போல் ஒரு கிழட்டு பயல் அதிகாரத்தில் இருந்து

கொண்டு புழம்ப அதைகேட்டு குழப்பம் அடைந்த என்னை போன்ற பாமரர்கள்

நிறையபேர் நம்மை இழிவு செய்து மகிழ்ச்சி அடைவதையே பிழைப்பாய் வைத்துள்ள

இவனை என்ன சொல்ல  பொய்களையும் புராணங்களை திரித்து கூறுவதில்

இவனுக்கு நிகர் இவனே உண்மையான பகுத்தறிவாழன் என்றால் 

பிற மத நூல்களையும் தூற்ற வேண்டியது தானே நமக்கு விழிப்புணர்வு

இல்லாத காரணத்தால் நம்மை ஏய்த்து பிழைப்பு நடத்துகிறான்

உலகிலேயே  3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த சாதனையாளன்

கருணாநிதி தயவு செய்து இவன் பேச்சை எவரும் நம்ப வேண்டாம்

இக்கட்டுரையை வழங்கிய 

ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களுக்கு நன்றி !

நன்றி தமிழ்ஹிந்து!

சித்திரையில் தொடங்கும் புது வருடம் - 1

thuglak-cartoonதமிழர் தம் மரபைத் திரித்த விநோதங்களுள் ஒன்று, வருடப் பிறப்பை சித்திரையிலிருந்து, தை மாதத்திற்கு மாற்றியது.
தொல்குடி என்றும், செம்மொழி என்றும் நம் பழமையைப் பற்றி நாம் பேசும் அளவுக்கு அந்தப் பழமையின் மீதும், தொன்று தொட்டு வரும் பழக்க வழக்கங்களின் மீதும் நமக்கே மரியாதையும், நம்பிக்கையும் இருக்கவில்லை என்பதைப் பறைசாற்றும் ஒரு சான்றுதான், தையில் வருடப் பிறப்பு என்று பிரகடனம் செய்தது.
நம்முடையது மூத்தகுடி. அது எப்படிப்பட்டது என்பதை, “வழங்குவதுள் வீழ்ந்தக் கண்..” என்னும் ‘குடிமை‘ அதிகாரக் குறளுக்கு உரையாகப் பரிமேலழகர் கூறிகிறார். “தொன்றுதொட்டு வருதல் சேர, சோழ, பாண்டியர் என்றாற்போலப் படைப்புக்காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட தமிழ்க்குடி என்பது படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வரும் குடிப் பெருமை உடையது என்று தெளிவுறுத்துகிறார். குடிமை என்பது, தம் மரபு விடாது, வழி வழியாக என்றென்றும் கடைபிடித்து வருதல் என்று பொருள். ஒரு செயல் வழக்கத்தில் உள்ளதென்றால் - அதிலும் அது என்று துவக்கப்பட்டது என்று அறியாத பழமை கொண்டதென்றால், அதை நம் முன்னோர் ஆய்ந்து, தெளிந்துதான் கடைபிடித்திருப்பர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
கற்றதனால் ஆய பயன் என்னவென்றால், இறைவனின் நற்றாள் தொழுதல் என்னும் அடிப்படை வழக்கத்தைக்கூடக் கடைபிடிக்காதவர்கள், தமிழ்க் குடியின் வாழக்கை முறையை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டிருக்க முடியும்? ‘அபிதான சிந்தாமணி’ அளவில்தான் புரிந்து கொண்டிருக்க முடியும் என்று நாம் சொல்லலாம்.

அபிதான சிந்தாமணியும் , நாரதரும்.
தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரையில் ஆரம்பிக்கக் கூடாது என்ற வாதத்தை வைப்பவர்கள், அதற்குக் காட்டும் காரணம் அபிதான சிந்தாமணி என்னும் நூலில் உள்ள, பிரபவ முதலான வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்தான்.
 ‘அறுபதினாயிரம் கன்னிகையரோடு நீர் இருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னியைத் தரக்கூடாதா’ என்று கேட்ட நாரதரைக் கன்னியாக்கி, அவரிடம் கிருஷ்ணன் பெற்ற அறுபது குழந்தைகள்தான் பிரபவ முதலிய அறுபது ஆண்டுகள் - இப்படிப்பட்ட ஆபாசக் கருத்து கொண்ட வழக்கம் நமக்குத் தேவையா என்றும், இது ஆரியத் திணிப்பு என்றும் இவர்கள் மேற்கோளிடும் அபிதான சிந்தாமணி, ஒரு இந்து மதப் புத்தகம் அல்ல. அறுபது வருடக் கணக்கைக் காட்டும் சோதிடப் புத்தகமும் அல்ல, அல்லது புராணப் புத்தகமும் அல்ல. அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமணரால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான அகராதி.
ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது. சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டும் தருவது மரபு. அறுபது வருடப் பெயர்கள், தொகுதி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக நிகண்டு ஆசிரியர்கள் பெயர், பொருள் போன்றவை மட்டுமே தருவர். மேற்சொன்ன விளக்கங்கள் போன்றவை, உரை ஆசிரியர்களால் பின்னாளில் எழுதப்படுவது.
மேற்கூறிய விளக்கத்தை, நிகண்டு ஆசிரியரோ அல்லது உரை ஆசிரியரோ யார் கொடுத்திருந்தாலும், இந்து மதத்தைத் தாம் புரிந்து கொண்ட வகையில், தம் மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்துள்ளனர். அவர் புரிந்துகொணடது வேறுவிதமாக என்றால், இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் தானே வேதவாக்காக இருக்க முடியும்? நேர்ப்பார்வை பார்ப்பவர்களுக்குத்தான், ஒரு கோணலை கோணல் என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் கோணலையே பார்ப்பவர்களுக்கு, கோணல்தான் நேரான ஒன்றாகத் தெரியும். இந்தக் கட்டுரையை மேலே தொடர்வதற்கு முன்னால், இவர்கள் கண்ட கோணல் என்ன என்று பார்ப்போம்.
raas_leelaஎங்கு பார்த்தாலும், எல்லா கோபியரும், கண்ணனுடன் இருப்பதாகப் பார்க்கின்றார் நாரதர். நாரதர் போன்ற மூவுலக சஞ்சாரிகளுக்கு, மக்கள் மனதில் ஓடுவது என்ன என்று புரியும். அதனால் அவருக்கு அப்படித் தெரிகிறது.
நம்மையே எடுத்துக்கொண்டால், நம்மில் கோடிக்கணக்கானவர் கண்ணனைத் தொழுபவர்களாக இருப்போம். கண்ணனைத் தொழும் ஒவ்வொருவருக்கும் கண்ணன் பிரத்யேகக் கடவுள். (மற்ற தெய்வங்களும் அப்படியே). ஒரு கோடி மக்கள் கண்ணனை நினைத்தால், கண்ணனும் ஒரு கோடி உரு எடுத்து, ஒவ்வொருவரோடும் தனித் தனியே உறவாடுகிறான் என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தம் அழுகை, தம் சிரிப்பு, தம் கவலை, தம் பெருமை என்று எல்லா உணர்வுகளையும் உள்ளத்தில் உறவாடும் கண்ணனுடன் பகிர்ந்து கொள்வர். இதில் நாம் கொள்ளும் பாவனை , பெண் என்னும் பாவனை. பிறந்த எல்லா உயிருமே பெண் பாவனையுடன் தான் அவனை அணுகுகின்றன. அறிவியல் கோணத்திலும், கரு உண்டாவது பெண் பாவனையில்தான், கருவுற்ற மூன்றாம் மாதம் தான் பால் மாறுபாடு உண்டாகிறது. அவனைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை என்று அணுகுகிற போது இந்த பாவனை உண்டாகிறது. இதையே நாரதருக்கும் காட்டி, ஒரு வாழ்நாள் சுற்று என்பது அறுபது வருடங்கள் என்று, பிரபவ முதலான அறுபது வருடங்கள், நாரதர் கண்ணனுடன் கூடி இருந்தார் என்று கூறும் தத்துவக் கதை இது. இதை ஹேமச்சந்திர சூரி (அல்லது உரை ஆசிரியர்) புரிந்து கொண்டது ஒருவிதம் என்றால், காலத்தின் கோலமாக, இதை ஓரினச் சேர்க்கையாகப் பார்ப்பது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி போலும்!
narada-kundஇந்தக் கதையின் மூலம், பிரம்ம வைவர்த்த புராணத்தில் வருகிறது. அதில், இந்த உலகில் மாயையைக் கடந்தவர் யாருமில்லை என்று படைப்புக் கடவுள் பிரம்மா கூறுகிறார். இதை நாரதர் ஒத்துக் கொள்ளவில்லை. ‘தான் விஷ்ணுவின் பக்தனானதால், தன்னை விஷ்ணு மாயா தீண்டாது’ என்று நாரதர் சாதிக்கிறார். அப்படி எண்ணி அவர் பூவுலகில் சஞ்சரிக்கையில், சர்பபுரி என்னும் இடத்தில் உள்ள குளத்தில் குளித்தவுடன், அவர் மாயையில் ஆட்படுகிறார். பெண்ணாக மாறி விடுகிறார். அவரைக் கண்டு மோகித்த அரசகுமாரனை மணம்புரிந்து கொள்கிறார். அவர்களுக்கு பிரபவ முதலான அறுபது குழந்தைகள் பிறக்கின்றன. அவ்வமயம், ஒரு போர் வந்து அப்போரில், அரசகுமாரனும், அந்த அறுபது குழந்தைகளும் இறந்து விடுகின்றனர். அதனால் சோகம் உற்ற நாரதர், விஷ்ணுவை வேண்டுகிறார். விஷ்ணுவும் காட்சி தந்து, மீண்டும் ஒரு குளத்தில் முழுகி எழச் சொல்கிறார். நாரதர் அப்படி எழுந்தவுடன், பழையபடியே நாரதராக மாறி, தான் அத்தனை வருடங்களும் மாயையில் இருந்ததை உணர்கிறார்.
இது நடந்த இடம் காகிநாடா அருகில் உள்ள சர்பபுரம் என்னும் க்ஷேத்ரம். இங்கு நாரத குண்டம், முக்தி குண்டம் என்னும் இரு குளங்கள் உள்ளன. இங்கு எழுந்தருளியிருக்கும் கடவுள் பெயர் “பாவநாராயணன்’ என்பது. வாழ்க்கை ஒரு பாவனை என்று காட்டுபவர் இவர். இந்த பாவனையை உண்மை என்று எண்ணி நாம் அதில் ஒன்றி விடுகிறோம். இப்படியே வாழ்நாளைக் கழிக்கிறோம். அறுபது வருடங்கள் என்பது ஒரு சுற்று வாழ்நாள் என்ற வகையில் காலம் முழுவதும் இந்த மாயையில் இருக்கிறோம். இந்தக் கதையில் கவனிக்க வேண்டியது  - பிரபவ, விபவ என்று பெயர் சூட்டப்பட்ட அறுபது வருஷக் குழந்தைகளும் இறந்து விடுகின்றன. இதில்தான் இந்தக் கதையின் தத்துவமே புதைந்து உள்ளது. அறுபது விதமாக, நல்லதும் தீயதும் நடக்கும் வாழ்க்கை ஒருநாள் முடிந்து விடும். இந்த அறுபது வருடங்களும் எதைச் சாதித்தோம், யாது செய்தோம், எதற்காகத்தான் வாழ்ந்தோம் என்பது தெரியாமல் இருக்கிறோம். அதுதான் மாயை. மாயையிலிருந்து விடுபட இறைவனைத் தொழுது வெளிவர வேண்டும்- நாரதரைப் போல என்பதே இதன் கருத்து.
இந்தக் கதையில் நாரதர் ஏன் மாட்டிக் கொண்டார் என்றால், நாரத என்றாலே ‘நாரம் தததி இதி நாரத’ என்று விரியும். ‘உயர்ந்த அறிவைத் தருவதால் இது நாரத என்றாயிற்று’ என்பது இதன் பொருள். நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல நாரதர் கதையும் நல்லறிவைத் தரவேண்டும். அந்த எண்ணத்தில், நாரதரைக் கதாநாயகனாக வைத்து நம் முன்னோர்கள் சொன்னது, இப்படித் திரியும் என்று யார் கண்டார்கள்?
ஆண் வருடனும், ஆண் வருடியும்
இந்தக் கதை தொடர்பான மற்றொரு கோணல் விளக்கம், ஒரு ஆண் வருடனும், ஒரு ஆண் வருடியும் சேர்வதால் பிறக்கும் குழந்தையே புது வருடமாகும் என்பது. அதனால் இது தமிழ் வருடப் பிறப்பு ஆகாது என்று சொல்லும் இவர்கள், யார் இந்த வருடன், யார் இந்த வருடி என்று தெரிந்து சொல்கிறார்களா?
வர்ஷா என்னும் வடசொல்லிலிருந்து மருவியது வருடம் என்று கூறலாம். வர்ஷா என்றால் ‘பொழிதல்‘ என்பது பொருள். அதன்படி இந்த வருடன், வருடி என்பவர்களெல்லாம் யார் என்றால், பொழிதல் என்னும் வினைப் பெயருக்கு உருவம் கொடுத்து உருவகப் படுத்தி சொல்லப்படுகிற கதை என்றாகிறது. அது குழந்தைகளுக்கும் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்ற கதை. குழந்தைகள் நம்பினார்களோ இல்லையோ, இவர்கள் நம்பி விட்டார்கள்; குழந்தை மனம் படைத்தவர்கள் போலிருக்கிறது!!
தீர ஆராய்ந்தால், வருடம் என்னும் பெயருக்கு வேறு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. வருடை என்னும் சொல், வருடம் என்று மருவியிருக்க வேண்டும்.
வருடை என்பது மேட ராசியின் பெயர். பாவை நோன்பை விளக்கும் பரிபாடல் 11-ஆம் பாடலில் வானத்தில் கோள்கள் இருக்கும் நிலையை விவரிக்கையில், ‘வருடையைப் படி மகன் வைப்ப’ என்று வருகிறது. செவ்வாய் கிரகம், வருடை என்னும் மேட ராசியை அடைந்தது என்று பொருள்.
varudaiவருடை என்பது ஒரு ஆடு. அது மலையாடு. மலைப்பகுதிகளில் மட்டுமே வசிக்கக் கூடியது. வருடையைக் குறிக்கும் ராசி மேட ராசி. அது குறிக்கும் மாதம் சித்திரை மாதம். அம்மாதம் தான் வருடத்தின் முதல் மாதம் என்று காட்டும் வகையில், நெடுநல் வாடையில்,
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து

என்று ஆட்டினைத் தலையாகக் கொண்டு, சூரியன் இந்த உலகத்தைச் சுற்றி விண்ணில் ஊர்ந்து வருகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
வருடை என்னும் ஆட்டுக்கு நம் முன்னோர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதற்கு ‘வான வரம்பன்’ என்று பெயர்பெற்ற, ஆடு கோட்பாட்டுச் சேரலாதனே சாட்சி.
அது என்ன ஆடு- கோட்பாடு? இப்படியும் ஒரு பட்டப் பெயரா? கூவம் கொண்டான், ஒகேனக்கல் கொண்டான், மெரினா கொண்டான் என்றெல்லாம் சொன்னால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆட்டை வைத்து என்ன இப்படி ஒரு பட்டப் பெயர் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?
கோட்படுதல் என்றால், பிடித்தல் அல்லது கட்டுதல் என்று பொருள். ஆட்டைப் பிடித்து வந்தமையால் இந்த அரசனுக்கு இப்படி ஒரு பட்டப் பெயர்.
இந்தச் சேர அரசன் சாதாரணன் அல்லன். பதிற்றுப் பத்தின் ஆறாம் பத்து இவன் மீது பாடப் பட்டவைதான். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பாடிய ஆறாம் பத்தின் பதிகத்தில், இந்த அரசன், தண்டகாரண்யத்திற்குச் சென்று அங்கிருந்த வருடையைப் பிடித்து, தொண்டி நகருக்குக் கொண்டு வந்தான், அதன் மூலம் வான வரம்பன் என்னும் பெயரும் பெற்றான் என்று சொல்லப்படுகிறது.
“குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வாரிற் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின்
*ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை*
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்”

தண்டகாரண்யம் என்பது விந்திய மலையின் தெற்குச் சரிவில் உள்ள காடு. (ராமர் வந்ததாக ராமாயணத்திலும் சொல்லப் படும் தண்டகாரண்யம் இதுவே). இந்தச் சேர மன்னன் தண்டகாரண்யம் சென்று வருடையைக் கொணர்ந்து, வான வரம்பன் என்றும், ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்றும் பெயர் பெற்றான் என்றால், அவன் வானத்தையே முட்டுவது போன்ற விந்திய மலையை எட்டி, அதனால் வான வரம்பன் என்னும் பெயரையும் பெற்று, அங்கு திரிந்துக் கொண்டிருந்த வரையாடு என்னும், மலையாடு என்னும் வருடையைக் கொணர்ந்து, அதனால் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்னும் பட்டத்தையும் பெற்றுள்ளான் என்பது தெளிவாகிறது.
இமயத்தை எட்டிய இவன் முன்னோன் “இமய வரம்பன்” என்று பெயர் பெற்றான். இவன் சென்றது தண்டகாரண்யம் என்றாலும், அங்கு சென்றதன் காரணமாக “வான வரம்பன்” என்று பெயர் பெற்றான் என்று பதிகம் கூறுவதால், அந்த வனத்தைக் கொண்டுள்ள விந்திய மலைச் சிகரத்தையே எட்டி உள்ளான் என்று தெரிகிறது. அங்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என்று ஆராய்ந்தால்- அவன் போரிடச் செல்லவில்லை. மலைச் சிகரங்களில் வாழும், வருடை என்னும் மலையாட்டைப் பிடித்துக் கொண்டு வரவேதான் அங்கு சென்றிருக்கிறான் என்று தெரிகிறது. எந்த அளவு வருடை ஆட்டுக்கு முக்கியத்துவம் இருந்திருந்தால், சேர அரசன், தானே சென்று அதைப் பிடித்து வந்திருப்பான்? அதன் காரணமாக பட்டப் பெயரையும் பெற்றிருப்பான்?
வருடை என்பது மேடத்தைக் குறிப்பதாலும், சூரியப் பயணத்தின் ஆரம்பம் மேடம் ஆதலாலும், ஆரம்பம் என்பது ஒரு உயர்த்த இடமாக இருக்க வேண்டும் என்னும் விழைவை ஒட்டியும் இந்த மலையாட்டினைக் கொணர்ந்துள்ளான் என்று புலனாகிறது. இன்றும் இரவிக்குளம், மூணாறு பகுதியில் காணப்படும், அபூர்வ வகை வரையாடு இந்த வருடையே.
இந்த வருடையைப் பற்றி சிலப்பதிகாரத்திலும் குறிப்பு வருகிறது. கண்ணகியின் கதையை சேரன் செங்குட்டுவன் தெரிந்துகொள்ளும் முன், மலைப்பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுது அவன் “வரையாடு வருடையும்” பார்க்கிறான் என்று சிலம்பு கூறுகிறது. (காட்சிக் காதை) இதன் மூலம் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், சிலப்பதிகார காலத்திற்கு முன்னமே இருந்தவன் என்று தெரிகிறது. அந்நாளில் வருடைக்கு எத்துணை முக்கியத்துவம் இருந்திருந்தால், அதைக் கொண்டு வந்திருப்பான்?
நம் தமிழ் முன்னோருக்கு, இமயமும், பொதியமும் நினைத்தாலே இனிக்கும் இடங்கள். மூணாறில் காணப்படும் வருடை (Nilgiri Tahr), இமயத்தில் காணப்படும் வருடை (Himalayan Tahr) வகையைச் சேர்ந்தது. இமயத்தில் காணப்படும் வரையாடு பொதியத்திலும் உலவ வேண்டும். சேரன் மலைநாட்டிலும் உலவ வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். இமயத்து வருடை வகை ஆடுகள் அந்நாளில் விந்திய மலையிலும் இருந்திருக்க வேண்டும். அவற்றை விந்தியத்திலிருந்து, சேரமான் கொண்டு வந்திருக்கிறான்.
vaniyalசூரியச் சுற்றின் ஆரம்பம் சித்திரை துவங்கும், மேட ராசியில் என்பதாலும், அவ்விராசி வருடை என்னும் மலையாட்டை அடையாளமாகக் கொண்டது என்பதாலும், வருடையில் ஆண்டு துவங்கியிருக்கிறது; வருடையில் துவங்குவதால், அது வருடம் என்று ஆகியிருக்கலாம்.
இதில் வருடன், வருடி என்ற ஜோடி எப்படி வந்தது? இப்படி ஜோடியாக சொல்லப்பட்டு, அந்த ஜோடியிடமிருந்து வருடம் பிறந்தது என்பது ஆபாசம் அல்லவா என்பது நம் குழந்தைக் கதை கேட்பாளர்கள் கொண்ட கவலை.
மேடத்தில் ஜோடி உள்ளது. அதுவும் ஆணும், ஆணும் சேர்ந்த ஜோடி! இந்த ஜோடியை நம் முன்னோர்கள் தம் பாடல்களில் பதிந்துள்ளனர். இந்த ஜோடியைப் பற்றி பரிபாடலில் இரு இடங்களில் காணலாம்.
இந்த அண்டம் முழுவதும், அவனிடத்திலேயே தோன்றி, அவனிடத்திலேயே விரிந்தன என்று திருமால் பெருமையைப் பேசும் 3-ஆம் பாடலில், எவை எல்லாம் தொன்றுதொட்டு அவனால் துவங்கப் பட்டவை என்று பட்டியலிடுகையில், “தாமா இருவரும்” என்று அசுவினி குமாரர்களைப் பற்றி சொல்லப்படுகிறது. படைப்புக்காலம் தொடங்கி, சில விஷயங்கள் முன்னோடியாக உள்ளன. பிரமன் முதலான தேவர்கள், சூரியன் முதலான கிரகங்கள், அசுவினி தேவர்கள் முதலான விண்மீன்கள், ஐம்பொறிகள், வசுக்கள், ருத்திரர்கள் என்று இந்தப் பட்டியல் செல்கிறது.
செவ்வேள் பற்றிய பரிபாடல் 8 -ஆம் பாடலில், யார் யாரெல்லாம் பரம் குன்றத்தில் இருக்கும் குமரனைக் காண வந்துள்ளனர் என்னும் போதும், அவரவர் வகையில், முதன்மை பெற்றவர்களையே சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், “மருந்துரை இருவரும்” என்று இரட்டையரான அசுவினி சகோதரர்களைப் பற்றி சொல்லபடுகிறது.
ஞாயிறு தன் பயணத்தை ஆடு - தலையாகத் துவங்குகையில், இரட்டையரான அசுவினி தேவர்களிடமிருந்து தான் துவங்குகிறான். (சோதிடப்படி, சூர்யக் கடவுளுக்கு முக்கியமான க்ஷேத்ரம் ஆடுதுறை என்னும் ஊர் ஆகும், மருத்துவக்குடி என்பதும் இந்த ஊரின் மற்றொரு பெயர் என்பது நினைவு கூறத் தக்கது. ஆடுதுறை மாசாத்தனார் என்னும் சங்கப் புலவரும் இருந்திருக்கிறார். ) மருத்துவர்களான இவர்கள் இருவரை முதலாகக் கொண்டு வருடம் பிறக்கிறது. ஆண் வருடன், ஆண் வருடி என்று இதை (யாரோ) உருவகப்படுத்தியதால், குழந்தைக் கதை கேட்பாளர்கள் அதையே பிடித்துக்கொண்டு விட்டனர்.
இவர்களுக்கு, நம் சங்கப் புலவர்கள், இன்னொரு அதிர்ச்சிக் கதை வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்டு, சங்கப் பாடல்களுக்கே முழுக்குப் போட்டு விடுவார்களோ நம் கதை விரும்பிகள்?
முன் கூறிய பரிபாடலில், தாமா என்று அசுவினி தேவர்களைக் குறித்துள்ளார்கள். தாமா என்றால் தாவும் குதிரை என்பது பொருள். அசுவினி தேவர்கள் குதிரையின் வயிற்றில் பிறந்தவர்கள். இதற்கு உரை கூறும் பரிமேலழகர், “உருப்பசி குதிரைப்பெட்டையாகியாளைக் கண்டு நயந்து, தானும் அவள்பாற் செல்கின்ற ஆதித்தியனுடைய நாசிகைத் துளைகளால் இரண்டு வீரிய விந்துகள் வீழ, அவர் அங்கே இரட்டைகளாய்த் தோன்றினர்” என்கிறார்.
இதை ஆபாசக் கதை என்பதா அல்லது ஆரியக் கதை என்பதா அல்லது ஆரியத் திணிப்பு என்பதா? ஆனால், சங்கப் புலவர் கடுவனிள வெயினனார் கூற, பரிமேலழகர் விளக்கியுள்ளாரே? இந்தக் கதைகள் எல்லாம் நம் தமிழ் முன்னோரும் ஏற்று, கையாண்டவையாக உள்ளனவே? ஆபாசம் என்றாலோ, அருவருப்பு என்றாலோ, அவர்கள் இவற்றை எழுதியிருப்பர்களா? நாம் சிந்திக்க வேண்டும்.
வேகமாக ஓடும் குதிரை போல சூரியன், இந்தப் பூ மண்டலத்தைச் சுற்றி வருகிறான் (நம் பார்வையில்). ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணம் செய்யும் அவன், ஏழு குதிரைகளாக ஏழு வண்ணங்களைத் தன்னகத்தே கொண்டு, ஒரு குதிரையாகவும் செல்கிறான் என்று உருவகப் படுத்தலாம். ஜோடியாகத் தேரை ஓட்டினால், இன்னும் ஜோராக ஓடலாம். அந்த ஜோடியை முதலாகக் கொண்டு, வருடம் முழுவதும் ஓடவே, அந்த வருடம் என்பதே அந்த ஜோடி பெற்ற குழந்தை என்று கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்றும் தெரிகிறது.
துவக்கம் என்பது அசுவினியிலிருந்துதான் என்று பல இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
பரிபாடல் 19-இல், முருகன் எழுந்தருளியிருக்கும் திருப்பரம் குன்றத்தில் ஒரு ஓவிய மாடம் இருந்தது என்றும் அங்கே முதலாவதாக இருந்த ஓவியம், சூரியம் வலம் வரும் அசுவினி முதலாவதாகிய நாண்மீன்கள், மற்ற பிற மீன்கள் (நட்சத்திரங்கள்) கொண்ட காலச் சக்கரத்தை விளக்கும் ஓவியமாகும் என்கிறார் நப்பண்ணனார்.
“என்றூழ் உரைவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்”

இங்கு சுடர் நேமி என்று ஞாயிறு மண்டலத்தை, சோதிடத்தில் கூறுவது போல, சக்கரம் என்கிறார். அந்தச் சக்கரத்தின் தலை மேடம் என்னும் ஆடு!
அசுவினி முதலான மீன்கள் தொட்டே திங்களும் வலம் வருகிறான். தன் மனைவியர் மற்றும் சுற்றத்தார் புடை சூழ, பாண்டிய மன்னன் பரம் குன்றத்தைச் சுற்றி வருவது, அசுவினி முதலான விண்மீன்கள் புடை சூழ, திங்களானவன் மேரு மலையைச் சுற்றி வருவதற்கு ஒப்பாகும் என்கிறது 19 - ஆம் பரிபாடல். “சுடரோடு சூழ் வரு தாரகை மேருப் புடை வரு சூழல்”
சூரியன் கதையில், ‘தாமா’வான அசுவினி, சந்திரன் கதையில், 27 மனைவிகளுள் முதன்மையான அசுவினி என்னும் பெண்ணாகி விடுகிறான்! ஆரியத் திணிப்பு, ஆபாசம் என்றெல்லாம் பெயர் சூட்டப்படும் இந்தக் கதைகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது என்று பகுத்தறிவுவாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அறிவியலை நம் முன்னோரும் தெரிந்து கொண்டுள்ளனர்.
ஞாயிறும், திங்களும், வானத்தைப் புணர்ந்தன - என்பது போன்ற சொற்றொடர்களை சங்கத் தமிழில் காணலாம். “வியல் விசும்பு விரிகதிர் மதியமொடு புணர்ப்ப” என்று ஆரம்பிக்கும் பரிபாடல் 11- ஐ விளக்கும் போது, “மேலவாய நாண்மீன்களைக் கீழாய மதி புணர்தலாவது:- அவ்வநேர் நிற்றன் மாத்திரமாகலின், அவற்றை ‘விசும்பு புணர்ப்ப’ என்றார்” என்று பரிமேலழகர் கூறுகிறார்.
திங்களானது தான் மணந்த மனைவியருள், ரோஹிணியிடம் அதிக அன்பு கொண்டிருந்தான் என்று கூறப்படுவதெல்லாம், அதன் சுற்றுப் பாதையிலேயே ரோஹிணி நட்சத்திரமும் அமையப் பெற்றதால்தான். வானப் பாதையில், சந்திரன் செல்லும்போது, மற்ற நட்சத்திரங்கள் அந்தப் பாதையிலிருந்து சற்று விலகியே உள்ளன. ரோஹிணி மட்டும்தான் பாதையிலேயே அமைத்துள்ளது. திங்கள் ரோஹிணியைக் கடக்கும் போது, அந்த நட்சத்திரத்துடன் ஓட்டிச் செல்வது போலக் காணப்படுவதால், அதை நினைவூட்டக் கதையாகக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்.
வருடையும் சித்திரையும்.
இங்கே ஒரு கேள்வி எழலாம். சூரியன் மேடத்திலிருந்து பயணம் தொடங்குவது, 12 ராசிகளைப் பற்றியதாக இருக்கலாம். மேடம் என்பது ராசிகளுள் முதன்மையானது. வருடக் கணக்கு என்பது, சித்திரையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது என்று இது எப்படி காட்டுகிறது? வேறு ஒரு மாதத்திலிருந்து கூட வருடம் ஆரம்பமாகியிருக்கலாமே என்று கேட்கலாம்.
தமிழ் சான்றோர் இந்தச் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. சூரிய மாதத்தைக் குறிக்கும் இடங்களிலெல்லாம், மேடம் முதலான ராசிகளின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சோதிடக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ள பழைய நாடிச் சுவடிகளைப் பார்த்தால், சூரிய மாதங்களான சித்திரை போன்றவற்றை, அவற்றின் ராசியின் பெயர் அல்லது பிற தமிழ்ப் பெயர்களால் மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, சித்திரை மாதத்தை மேடம், மை, மறி, ஆடு, வருடை, கொறி என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். சூடாமணி நிகண்டிலும் இவற்றைக் காணலாம்.
இரண்டு விதமான மாதக் குறிப்புகளை நாம் பின்பற்றி இருக்கிறோம். ஒன்று சூரிய மாதம், மற்றொன்று சந்திர மாதம். ராசிகளின் பெயரைக் குறித்தே சூரியன் சஞ்சரிக்கும் மாதங்கள் சொல்லப்பட்டன. சந்திரனைக் குறித்தே சித்திரை என்னும் மாதங்கள் சொல்லப்பட்டன.
மாதம் என்னும் சொல்லே, மதி என்னும் சொல்லிலிருந்துதான் உண்டாயிற்று. எந்த நட்சத்திரத்தில் மதி, முழு மதியாகிறதோ, அந்த நட்சத்திரத்தின் பெயரில்தான் சந்திர மாதங்கள் சொல்லப்பட்டன. இந்த முறைக்கு சாந்திரமானம் (Lunar Calender) என்று பெயர். இந்தப் பெயர்கள் நாளடைவில் சூரிய மாதங்களுக்கும் சேர்த்து, தற்காலத்தில், சூரியமாதப் பெயர்களாகி விட்டன.
சூடாமணி நிகண்டு தரும் சூத்திரப்படி, இன்றைய தமிழ் மாதப் பெயர்களை பௌர்ணமி வரும் நட்சத்திரங்களைக் கொண்டு அறிய முடிகிறது.
பின்வருவன, பௌர்ணமி காணும் நட்சத்திரங்களின் தமிழ்ப் பெயர்கள். அவையே, அந்த மாதப் பெயர்களாக ஏற்கப்பட்டுள்ளன.
சித்திரை - சித்திரை நட்சத்திரத்தில் பௌர்ணமி.
வைகாசி - விசாகத்தின் மற்றொரு பெயர் வைகாசி
ஆனி - மூல நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆனி.
ஆடி - உத்திராட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆடி..
ஆவணி - அவிட்ட நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஆவணி.
புரட்டாசி - பூரட்டாதி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் புரட்டை
ஐப்பசி - அசுவினி நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் ஐப்பசி.
கார்த்திகை - கார்த்திகை நட்சத்திரம்
மார்கழி - மிருக சீரிடத்தின் மற்றொரு பெயர் மார்கழி
தை - இது விதிவிலக்கு. தைப்பதால் அது தை. எதைத் தைக்கிறது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
மாசி - மகம் நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் மாசி.
பங்குனி - உத்திர நட்சத்திரத்தின் மற்றொரு பெயர் பங்குனி.
இந்த இரண்டு வகை மாதங்களையும் பின்பற்றி வந்தது குறித்து, பழம் தமிழ் இலக்கியங்களிலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

 தொடரும்.....

1 கருத்து:

Prathap Kumar S. சொன்னது…

அப்படி போடு அருவாளை...